- GeneralViral Check
- December 5, 2024
- No Comment
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24 அன்று) அறிவித்திருந்தனர். அதே நாள் ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளில் இளம் வயதில் இருந்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பங்கேற்ற பேசிஸ்ட் மோகினி டே என்பவரும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்ஐ விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல செய்தி ஊடகங்களிலும், பல சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி வைரலானது.
இந்நிலையில், மோகினி டே கிட்டார் வாசிக்கும் போது ஏ.ஆர்.ரஹ்மான் அதை புன்னகையுடன் ரசிப்பது போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பரவி வரும் இந்த வீடியோ உண்மையா அல்லது சிலரால் வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்தியா?
உண்மை என்ன?
ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றியும் அவருடன் பணிபுரிந்த மோகினி டே அவர்களைப் பற்றியும் பரவி வரும் இந்த செய்தி உண்மை தானா என்று இந்த வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கூகிள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆராய்ந்து பார்தோம். அப்போது மோகினி டே அவரது instagram பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ கிடைத்தது. தனது வீட்டில் பயிற்சியில் ஈடுபத்திருக்கும் போது எடுத்த வீடியோ என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதே போல், ஏ.ஆர்.ரஹ்மானின் அதிகாரப்பூர்வ instagram பக்கத்தில் அவர் celebrating the goat life, chamkila and maidhaan! என்ற தலைப்புடன் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். இப்போது வைரலாக பரவப்படும் அந்த வீடியோவில் ஏ.ஆர். ரஹ்மான் ஆடு ஜீவிதம் திரைப்பட இயக்குனருடன் காணப்பட்டார். அந்த வீடியோவில், மோகினி டே இடம்பெறவில்லை. வேண்டுமென்றே அவதூறு பரப்பும் எண்ணத்துடன் சிலர் இரண்டு வீடியோவையும் ஒன்றாக இணைத்து இவ்வாறு பகிர்ந்து வருகின்றனர், என்பது தெரியவந்தது.
இந்த இரண்டு விவாகரத்தும் தற்செயலாக ஒரே நாளில் அறிவிக்கபட்டது. ஆனால், சமூக வலைத்தளங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றியும் அவரது bassist மோகினி டே பற்றியும் தவறான செய்திகள் பரவப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடரப் போவதாகவும், தேவை இல்லாத வதந்திகளையும், வீடியோக்களையும் உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் ஏ ஆர் ரஹ்மான் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
யூடியூபர்கள் மற்றும் தமிழ் மீடியாக்கள் இவ்வாறு அவதூறு பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தலைசிறந்த மனிதர் என்றும் சாய்ரா பானு தன்னுடைய குரலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ரோல் மாடல் என்றும், தங்களுக்கு எதிரான தவறான தகவல்கள் மற்றும் அடிப்படையற்ற கூற்றுக்கள் பரப்புவதை முற்றிலும் நம்பமுடியவில்லை என்றும் மோகினி டே தெரிவித்தார். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
மதிப்பீடு:
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவர் bassist மோகினி டே இருவரும் ஒரே நாளில் விவாகரத்து செய்தியை அறிவித்தது தற்செயலான ஒன்று. இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவப்படும் வதந்திகள் எல்லாம் அவதூறு பரப்பும் நோக்கதுடன் பகிரப்பட்ட போலியான செய்தி. இதை எதிர்த்து ஏ. ஆர். ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானு மற்றும் மோகினி டே ஆகிய மூவருமே இப்படி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனவே, அவர்களின் தனிப்பட்ட வாழ்கைக்கு மதிப்பு அளித்து இப்படி போலியான செய்திகளை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.