- ExplainersHealth Check
- May 19, 2023
- No Comment
சூரிய ஒளியில் புல் தரையில் நடந்தால் கண் எரிச்சல் பிரச்சனை சரியாகிவிடுமா?

அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், மற்றும் வறட்சி, போன்ற ‘computer related injuries’ வராமல் இருக்க, காலை நேரத்தில் புல் தரையில் காலணிகள் இல்லாமல் நடந்தால், பாதம் வழியே Chlorophyll உடம்பிற்குள் சென்று, கண்பார்வை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் என்று ஒருவர் பேசும் வீடியோ ட்விட்டர் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து நாம் ஆராய்ந்தபோது, இதற்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக திருவண்ணாமலையைச் சேர்ந்த கண் மருத்துவர் சரயு காயத்திரி தனது முகநூல் பக்கத்தில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
அதில், இந்த காணொளியில் கம்ப்யூட்டரில் வேலை செய்வதால் ஏற்படும் கண் வறட்சிக்கு, புல்லில் நடப்பதால் அதில் இருக்கும் பச்சை நிறமி(chlorophyll), கண்ணுக்கு ஏறிவிடும் என்று சொல்கிறார்கள்.
விளக்கம் இதோ:
கம்ப்யூட்டரில் வேலை செய்வதால் ஏற்படும் கண் தொந்தரவுகள் (computer eye syndrome).
இப்பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
கண்களை மிகவும் கிட்டத்தில் வெகுநேரம் இமைக்காமல் பார்ப்பதால்.
1. கண்ணீர் வறண்டு கண் எரிச்சல் கொடுக்கும். நீர் வழியும்.
2. கண் தசைகள் தொடர்ந்து வேலை செய்வதால் வலுவிழக்கும் – Eye strain.
3. கண்விழி தனது வடிவத்தில் மாறி சிலிண்டர் பவர் கண்ணில் ஏறும். – (Cylinder power).
4. மேலும் கம்ப்யூட்டர் திரையில் இருந்து வரும் ப்ளூ லைட்(blue light) என்பது அலைவரிசை குறைவான (<450 nm) வெளிச்சமாகும். இது கண் நரம்பு மைய புள்ளியை(Macula) தாக்கும். – Macular degeneration.
இங்குதான் ராடுகள் மற்றும் கோன்கள் (rods and cones) எனப்படும் நிறமி செல்கள் உள்ளன.
5. வைட்டமின் ஏ குறைபாடு: பார்வைக்கு தேவைப்படும் நிறமி ரெட்டினால் (Retinol). விட்டமின் ஏ இல் இருந்த ரெட்டினால் பெறப்படுகிறது.விட்டமின் ஏ மீன், ஈரல், பப்பாளி ,கேரட் ,மஞ்சள் பூசணி ஆகிய மஞ்சள் நிற உணவுகளில் உள்ளது.

மேலே உள்ள பல காரணங்களில், ஏதேனும் ஒரு காரணம், கண்ணுக்கு தொந்தரவு கொடுக்கலாம்.
தீர்வை காணலாம்:
1. கண், பரிணாம வளர்ச்சியில் 6 மீட்டர் தூரத்திற்கு மேலேயே பார்க்க பழக்கப்பட்டது. அதனால் அனைவருக்கும் கண்ணுக்கு ஓய்வு கொடுப்பது சாத்தியம்.
ஒவ்வொரு 20 நிமிட வேலைக்கு பிறகும், 20 நொடிகள், 20 அடி தள்ளி இருக்கும் காட்சியை பார்க்க வேண்டும். இது கண்ணுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். கண் வறட்சியை விரட்டியடிக்கும்.
2. கணினி /மொபைல் திரையை கண்ணிலிருந்து 40 முதல் 75 சென்டிமீட்டர் தள்ளிவைக்க வேண்டும்.
3. Glare தவிர்க்க திரையின் கோணத்தை, வெளிச்சத்தை (tilt and brightness) சரிசெய்துகொள்ள வேண்டும்.
4. தேவையான நீர்,சத்தான உணவு, மிகவும் உதவி புரியும் கண் பார்வைக்கு.
5. தேவைப்படுவோர் கண் கண்ணாடி அணிய வேண்டும். பல நேரங்களில் அது கணினியைப் பயன்படுத்தும் போது மட்டும் அணியும் வகையில் இருக்கும்.
6.தீவிரம் அதிகம் இருப்பின், கண் சொட்டு மருந்துகள், மருத்துவர் கூறும் நாட்களுக்கு எடுத்து கொள்ளவேண்டும்.
7. தலைவலி மற்றும் பார்வை மங்கலாக இருக்கும் போது, நிச்சயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிவியல் பூர்வமான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் கண் மருத்துவர் சரயு காயத்ரி பதிவிட்டுள்ளார்.
எனவே, செருப்பு இல்லாமல் புல் தரையில் நடந்தால், கண் வறட்சி சரியாகிவிடும் என்பது ஒரு தவறான தகவல். எனவே இதை உண்மை என்று யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி: Dr Sarayu Gayathri