- ExplainersPoliti Check
- July 29, 2023
- No Comment
மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்ட போலிச் செய்திகள் – பின்னணியை விளக்கும் கட்டுரை!

மணிப்பூரில் இரண்டு குக்கி பழங்குடியினப் பெண்களை மெய்தே இன ஆண்கள் நிர்வாணமாக அணிவகுக்கச் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கொடுமை ஒரு வீடியோ மூலம் வெளியே வந்து நாட்டையே உலுக்கியது.
கடந்த மே மாதமே நடந்த இந்த அநியாயம், மணிபூரில் முடக்கப்பட்ட இன்டர்நெட் மீண்டும் கொண்டுவரபட்டதால் தற்போது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த கொடுமையை ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் மற்றவர்களுக்கு செய்யக் காரணம் என்ன?
மே 3 அன்று மணிப்பூரில் தொடங்கிய இனக்கலவரம் பரந்த அரசியல் தாக்கங்களோடு அமைந்த ஒன்று. இப்படிப்பட்ட தாக்குதல்களில் பொதுவாக பெண்கள் இழிவுப்படுத்தப்படுவதும், அதை குறித்து அனைவரும் மௌனம் சாதிப்பதும் எப்போதும் நடக்கும் ஒன்று. ஏற்கனவே நடக்கும் கொடுமைகளுக்கு மத்தியில் மணிபூரில் பரவும் போலியான செய்திகள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடூரங்களை மேலும் அதிகரிதுள்ளது என்று பல பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தவறான தகவல்களும் வதந்திகளுமே மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடூரங்களுக்கு வழிவகுத்து விட்டது என்றும் தெரிகிறது. மே 3 முதல் மணிப்பூரில் மீண்டும் மீண்டும் நடக்கும் வன்முறையில் பல கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் தடையின்றி பரவும் போது அவை ஏற்படுத்தும் பெரும் சேதம் விவரிக்க முடியாதது.

மணிப்பூரில் பரவிய பொய்ச்செய்திகள்
மெய்தே இனத்தைச் சார்ந்த பெண்கள் குக்கி சமூகத்தினாரால் பாலியல் வன்புணர்வு செய்யபட்டதாக பரவிய போலி செய்தியால், அங்கே குற்றவாளிகள் தாங்கள் பெண்களுக்கு எதிராக நடத்தும் கொடுமைகளை பழிதீர்த்தல் என்ற பெயரில் நியாயப்படுத்துகின்றனர். பொதுமக்களின் ஆதரவை வலுபடுத்தவும், தங்கள் பிரச்சாரத்தை ஊக்குவிக்கவும், மெய்தே பெண்களை குக்கி இனத்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என்ற போலிச் செய்தியை மெய்தே இனப் போராளிகள் பரப்பி வந்தனர்.
ஆனால், மணிப்பூரின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) பி டவுங்கல்,
“சுராசந்த்பூரில் மெய்தே பெண்களை பலாத்காரம் செய்த வழக்குகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுதியுள்ளார்.

மேலும், சுராசந்த்பூர் மருத்துவக் கல்லூரியில் மெய்தே செவிலியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படம் பரப்பப்பட்டது.

ஆனால், அது 2022ல் உத்தரபிரதேசத்தின் மதுராவில் கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம் என்பது பின்னர் தெரியவந்தது. Meitei செவிலியரின் தந்தை, K Achouba, இம்பாலில் உள்ள உள்ளூர் செய்தி சேனலான ISTV மூலம், தனது மகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவளைப் பற்றிய வதந்திகள் தவறானவை என்றும் தெளிவுபடுத்தினார்.
இதைபோல், புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது சில மெய்தே போராட்டக்காரர்கள் ஒரு பெண்ணின் பெரிய புகைப்படத்தைக் காட்டி, குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் உடல்ரீதியாக தாக்கப்பட்ட மெய்தே பெண்ணின் உடல் என்று பிரசாரம் மேற்கொண்டனர்.
ஆனால், அந்த புகைப்படம் அருணாச்சல பிரதேசதில் குடும்ப இன்னல்களுக்கு ஆளான ஒரு பெண்ணின் புகைப்படம் என்று பின்னர் தெரியவந்தது.
இம்பாலில் உள்ள ஷிஜா மருத்துவமனையின் பிணவறையில் பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட 37 மெய்தே பெண்களும் ஒரு 7 வயது குழந்தையும் கிடத்தப்பட்டுளதாக செய்தி ஒன்று வைரலாக்கப்பட்டது.
ஆனால், மருத்துவமனை இந்த கூற்றை கடுமையாக மறுத்துள்ளது. ஷிஜா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை எப்போதும் செய்வதில்லை என்று மருதுவமனை நிர்வாகம் உறுதியாகக் கூறியுள்ளது.

வன்முறைகளுக்கு வித்திட்ட பொய்ச் செய்திகள்
இப்படி தவறான தகவல்கள், பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும் மதிப்பீடு செய்யபட்டு போலியானவை என்று கண்டறியப்பட்டாலும் அவை ஏற்படுத்திய சேதங்களைச் சொல்லால் விவரிக்க முடியாது. பல குக்கி-ஸோ பெண்கள் இத்தகைய தவறான தகவல் பிரச்சாரங்களின் சுமைகளைச் சுமந்தனர். இதனால் இவர்கள் வன்முறை மற்றும் பல்வேறு வகையான பாலியல் வன்கொடுமைகளுக்கு பலியாகினர்.
இந்த ‘பழிவாங்கும்’ வன்முறையால் இருதரப்பிலும் பாதிக்கபட்டவர்கள் பெண்களே. பழி தீர்க்க பாலியல் வன்புணர்வு என்ற கொடுமையை வேறு இனப் பெண்களுக்கு செய்வது எதிரியை சிறப்பாக பழிவாங்கும் ஆயுதமாக கருதப்படுகிறது.
உளவியல் ரீதியாக ஒரு சமூகத்தை தாழ்த்த நினைத்தால் அந்த இனத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தினாலோ அல்லது வன்புணர்வு செய்து துன்புறுத்தினாலோ, அந்த இனத்தின் ஆண்களை வெற்றி கொண்டதாகக் கருதப்படுகிறது.
வைரல் ஆக்கப்பட்ட இந்த போலிச் செய்திகள் உண்மை அல்ல என்று தெரிந்த பின்னும் மணிப்பூரில் பல மாதங்களாக வன்முறை நிகழ்வதன் காரணம் என்ன?
உண்மையிலேயே அந்த செய்திகள் போலி என நிராகரிக்கப்பட்ட பின்னும் மக்கள் அதை நம்புகிறார்களா? அல்லது ஒரு காரணத்தை உருவாக்கி, குற்றவாளிகள் தங்கள் அட்டூழியங்களை நியாயப்படுத்த இந்த திட்டமிட்ட தவறான தகவல் பிரச்சாரத்தினை பரப்புகிறார்களா?
இதே போல், 1993 ஆம் ஆண்டு மணிப்பூரில் முஸ்லிம்களிக்கு எதிராக நடந்த வன்முறையிலும் போலியாக பரவிய செய்தியால் 130 பன்கள் இன முஸ்லிம்கள் உயிரிழந்ததாக செய்தி வெளியாகிஉள்ளது.
link: https://twocircles.net/2023may26/449043.html
தவறான தகவல் மூலம் சாதகமான பிரச்சாரத்தை ஏற்படுத்தி சமூக பிளவுகளை உருவாக்க முடியும் என்பதற்கு மணிபூரில் நடக்கும் கொடுமைகள் நமக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றன.
இந்த போலிச்செய்திகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் தீங்கிழைக்கவில்லை. அங்கே நடக்கும் கொடுமைகள் மனித இனமே வெட்கபடும் அளவுக்கு கொடூரமாகி உள்ளது.
போலியான செய்திகள் ஏற்படுத்தும் தீங்கினை உணர்ந்து மக்கள் அனைவரும் வெறுப்பை ஒருவர் மீது ஒருவர் செலுத்தாமல், பழிவாங்கும் குணத்தை விட்டால் தான் மணிப்பூரில் அமைதி நிலவும்.